வியாழன், 7 ஜூன், 2018

ஆன்மிகம் விளக்கம்

#கஜேந்திரமோட்சம்
எழுத்துச் சித்தர்" − "பாலகுமாரன் பதில்"

உங்கள் மகள் ஸ்ரீ கௌரி கஜேந்திர மோட்சம் கதையை நீங்கள் சொன்னவுடன் 'எதற்கு ஸ்வாமி முதலையை வெட்டிக் கொன்றார்? இரண்டு பேரையும் சண்டை போடவேண்டாம் என்று விலக்கி விட்டிருக்கலாமே?' என்று தன் சிறு வயதில் சொன்னதாக எழுதியதைப் படித்திருக்கிறேன். உண்மையில் கஜேந்திர மோட்சத்தின் தத்துவம் என்ன?

கஜேந்திர மோட்சத்தைப் பற்றி வெகுநாள் முன்பே நான் யோசித்து தெளிவாக ஒரு விடையை மனதில் வைத்திருந்தேன். எவரிடமும் அதைப்பற்றி பகிர்ந்து கொள்வதில்லை.

அதைப் பகிர்ந்து கொள்கிற மாதிரி எனக்கு எவரும் கிடைக்கவில்லை. நீங்கள் கேட்டதும் எனக்கு இதை வெளியே சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.

உங்களுக்குத் தெரியுமல்லவா? உடம்பில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, ஆஞ்ஞை அதற்கு மேலாக சகஸ்ரஹாரம் என்ற நிலை தலைக்கு மேலே இருக்கிறது. அது கடவுளுடைய நெருக்கத்திற்குப் போன நிலை. அதை விட்டுவிடுவோம்.

கீழே மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம் என்ற மூன்றும் மனிதனுடைய உடம்போடு சம்பந்தப்பட்டவை. மூலாதாரத்தின் சக்தி உங்களை, உங்கள் நாடிகளை இழுத்துப் பிடித்து வைத்து உங்களை உயிர்ப்போடு இருக்க வைக்கிறது. நீங்கள் நடமாடவும், பேசவும், புரிந்துகொள்ளவும் உண்டான பலத்தின் மூலம் அங்குதான் இருக்கிறது.

அடுத்தது சுவாதிஷ்டானம். இது உங்கள் குறி உள்ள இடத்தில் இருக்கிறது. வம்ச விருத்திக்காக, உங்களுக்கு குழந்தைகள் பிறப்பதற்காக, போகத்தை அனுபவிக்க பலம் தரும் இடம் அது.

அதற்கு மேல் இருப்பது மணிபூரகம். உணவு நன்கு உண்டு செரிமானம் ஆனால்தான் நீங்கள் போகத்தை அனுபவிக்க முடியும். உணவு மலக்குடலில் தங்கி வெளியே போனால்தான் உங்களால் நன்றாக பேசிச் சிரித்து, ஜீவித்து இருக்க முடியும்.

மணிபூரகத்தின் வேலை ஒரு அக்னியியை ஏற்படுத்தி வருகின்ற உணவுகளை தகித்து, அதனுடைய ஜீரண சக்தியை உடம்புக்குள் அனுப்பி சக்கையை வெளியேற்றும். இந்த மூன்றும் ஒரு தனிக் குழுவாக இருக்கின்றன.

அனாகதம், கடவுள் என்ற, பிரபஞ்சம் என்ற, அல்லது இயற்கை என்ற, அல்லது தான் என்கின்ற ஒரு நிலையை கண்டுபிடிக்கின்ற, தேடுகின்ற இடமாக, மனமாக இருக்கிறது. அதற்கு மேல் இருப்பது விசுத்தி.

அந்த விசுத்தியில்தான் மனம் இழுபட்டு ஒரு புள்ளியில் நின்று 'அதோ அதோ' என்று கதறியபடி கடவுளை நோக்கிப் போகவேண்டிய சத்தத்தை உண்டு பண்ணுகிறது. வேதங்கள் அங்கிருந்துதான் கிளம்பின. பரவச நிலையில் அங்கிருந்துதான் எல்லாவித சொற்களும் வெளியே வந்தன.

ஆஞ்ஞை என்பது அந்த சத்தம் தாண்டி இருக்கின்ற அமைதியை உள்வாங்கிக்கொண்டு மிக உறுதியாக கடவுளுக்கு நெருக்கமாக, கடவுளைக் காணுகின்ற ஆவலோடு கம்பீரமாக இருக்கின்ற இடம். அதிலிருந்து கிளம்பி சகஸ்ரஹாரம் தொடுகிறபோது கடவுளோடு தொடர்பு ஏற்படுகிறது.

கடவுள், இயற்கை, பிரபஞ்சம், ஆத்மா என்கிற எல்லா விஷயங்களும் ஒன்றே. கீழே இருக்கிற சுவாதிஷ்டானம், மணிபூரகம், மூலாதாரம் இந்த மூன்றும் உங்களை இந்த பூமியிலிருக்கும் சுகங்களை நோக்கி இழுக்க முயற்சிக்கின்றன.

இந்த மூன்றும் முதலை என்று உருவகப்படுத்தப் பட்டிருக்கிறது. சேற்றில் இருக்கின்ற முதலை, மிகப் பலம் பொருந்திய முதலை. நீரில் இருக்கின்ற முதலைக்கு வலு அதிகம். அது பெரிய யானையை புரட்டிப் போட்டு அடித்துக் கொன்றுவிடும்.

யானை அதிலிருந்து விடுபடவே முடியாது. யானை என்பது இங்கே அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை. இவையெல்லாம் கடவுளைத் தேடுகின்ற உயர்நிலையாக உருவகப்படுத்தப் பட்டிருக்கிறது.

உயர்நிலையில் இருக்கின்ற ஞானியை கீழ் நிலையில் இருக்கின்ற ஆசாபாசங்கள், பெண் ஆசை, இது வேண்டும் அது வேண்டும் என்ற எண்ணங்கள், சொத்து சேர்க்கின்ற மனோ பாவங்கள், அதற்குண்டான துரோகச் செயல்களை, கேவலங்களை, உத்தியை அந்த முதலை ஏற்படுத்துகிறது.

வயிற்றுக்குச் செல்லும் உணவு, உணவால் ஏற்படுகின்ற திமிர், அந்தத் திமிரால் ஏற்படுகின்ற அகங்காரம் இவையெல்லாம் இந்த மூன்று விஷயங்களோடு தொடர்புடையவை.

நான் என்று மூலாதாரம் நிற்க வைக்க, அதை செயலாக்குகின்ற திமிராக சுவாதிஷ்டானம் இயங்க, மணிபூரகம் அதற்குண்டான சக்தியை அவற்றுக்குக் கொடுக்க, அந்தத் திமிர் உச்சகட்ட நிலையை அடைகிறது.

இந்தத் திமிரோடு உள்ள மனிதர்கள் அனைவரும் அந்த மூன்று சக்கரங்களிலும் மிக உன்னதமாக இருக்கிறார்கள். அவை முதலையாகி அவர்களிடம் இருக்கின்றன.

மனம் அனாகதம் தொட்டவுடன், அனாகதம் மலர்ந்தவுடன் உங்களுக்குள் இருக்கின்ற மனோநிலை இது சரியில்லையே நாம் வேறுபக்கம் போகவேண்டுமே என்று நிமிர்கிறது.

எத்தனை பொய்கள் சொல்கிறோம், எத்தனை அபத்தங்கள் செய்கிறோம், எத்தனை துரோகங்கள் செய்கிறோம், எவ்வளவு பொறாமை கொள்கிறோம் என்ற எண்ணங்கள் வர, மனம் குவிந்து கடவுளை நோக்கி ஆடுகிறது, பாடுகிறது, பேசுகிறது, உள்ளுக்குள்ளே ஏங்கி ஏங்கித் தவிக்கிறது.

தவிப்பின் உச்சியில் தொண்டைக்குழியில் அதாவது விசுத்தியில் பலமான சத்தம், சொற்களற்ற சப்தம் எழுகிறது. அலறலாயும் ஏற்படுகிறது. விக்கி விக்கி அழுகிறது. அந்த அழுகை தாண்டி ஆஞ்ஞையில் அதாவது நெற்றியின் நடுவில் மனம் வியக்க அமைதிப்படுகிறது.

யானை என்ற இந்த மூன்றையும் காப்பாற்றுவதற்காக, முதலை என்ற அடுத்த மூன்றையும் கட்டி வைப்பதற்காக, கீழே உள்ள மூன்றும் இழுப்பின் மேலே உள்ள மூன்றும் சரியாகச் செயல்படாது என்று சகஸ்ரஹாரத்தின் மேல் இருந்த அந்த பிரபஞ்ச சக்தி, அந்தக் கடவுள் சக்தி, விஷ்ணு என்கிறவர் தன்னுடைய சக்கரத்தால் அந்த முதலையை அழிக்கிறார்.

கீழ் மூன்று விஷயங்களையும் தகர்க்கிறார். காமத்தை அழிக்கிறார். கோபத்தை அழிக்கிறார். பொறாமை பொய்யை அழிக்கிறார். நான் என்ற அகங்காரத்தை அழிக்கிறார். முதலை இறந்துபோக யானை கடவுளை வாழ்த்திக்கொண்டு போகிறது.

அந்தத் தாமரை என்ன? அதுதான் சகஸ்ரஹாரம். ஆயிரம் இதழ்கள் கொண்ட அந்தத் தாமரை மலர்ந்து இறைவனை நோக்கி, பிரபஞ்சத்தை நோக்கி, சக்தியை நோக்கி நிற்க, அந்த சக்தியினுடைய தொடல், அந்த சக்கரத்தினுடைய தொடல், கடவுளுடைய தொடல் திடீரென்று ஏற்பட்டு உங்களை புனிதமாக்கி விடுகிறது. உங்களை மனித ரூபத்திலிருந்து விலக்கி விடுகிறது

நீங்கள் உணவிலிருந்தும், பல ஆசைகளிலிருந்தும் விடுபட்டு விடுகிறீர்கள். இதுதான் முதலையும், யானையும் கொண்ட விஷயம். கடவுளுடைய தொடுதலைத்தான், ஏங்கினால் கடவுள் வருவார் என்ற நம்பிக்கையைத்தான் இந்த குண்டலினி அடுக்கு மூலம் சொல்கிறது.

குண்டலினி நகர நகர, சகஸ்ரஹாரம் தொட, இந்தக் கடவுளுடைய நெருக்கம், அண்மை, தெளிவு ஏற்பட்டுவிடும். அதற்கு மற்றவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய இந்த மூன்றும் செயல்பட வேண்டியது அவசியம். அனாகதத்தில் மனம் லயிக்க வேண்டியது அவசியம். இது மிக மிகப் பெரிய விஷயம். இவ்வளவுதான் இப்போதைக்குச் சொல்ல முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எங்கே செல்கிறோம்?

நாம் பள்ளி சென்ற காலத்தில் அதிக அளவில் தொலைக்காட்சி காட்சிகள் கூட பார்த்தது இல்லை... வாரத்தில் வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் மட்டும் தான் ஒர...